You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 தமிழர்களும் காட்டுக்குள் சென்றது ஏன்? குடும்பத்தினர் புதிய தகவல்
- எழுதியவர், சிவசுப்ரமணியம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கர்நாடக மாநிலம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மரிய மகிமை தாஸ் என்பவர் காயமடைந்தார்.
தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள கர்நாடக பகுதியான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் வனத்துறை அலுவலர்களை தாக்கியதாகவும் வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வசம் இருந்து துப்பாக்கி மற்றும் மான் இறைச்சி மீட்கப்பட்டதாகவும் வனத்துறை தெரிவித்தது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அவர்களின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். நால்வரும் காணாமல் போன மாடுகளைத் தேடியே காட்டுக்குள் சென்றதாக ஜெபஸ்டின் டேவிட் குமாரின் மனைவி டோமினோ லியோ மேரி தெரிவிக்கிறார்.
'மாடுகளைத் தேடிச் சென்றார்கள்' - உயிரிழந்தவரின் மனைவி கூறுவது என்ன?
உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதே வேளையில் ஹானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை 9 மணி அளவில், ஹானூர் காவல் நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சர்க்கிள் பகுதியில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இறந்து போன மூன்று நபர்களின் குடும்பத்தினர் சிலரை ஹானூர் காவல் நிலையத்திற்குள் தனியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுடன் களத்தில் இருந்த ஜெபஸ்டின் டேவிட் குமாரின் மனைவி டோமினோ லியோ மேரி பிபிசி தமிழிடம் பேசியபோது, "எனது கணவர் கேரளா மாநிலத்தில் ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கணவரின் அக்கா வீட்டுக்காரர் வளர்த்து வரும் 50 மாடுகளில் காட்டுக்கு மேய்ச்சலுக்கு போன சில மாடுகள் காட்டுக்குள்ளேயே நின்று கொண்டன.
இரவில் மாடுகள் காட்டில் இருக்கும்போது, புலி, சிறுத்தை பிடித்துக் கொன்றுவிடும். அதனால், மாடுகளைத் தேடி என்னுடைய கணவர் ஜெபஸ்டின் டேவிட் குமார் வேறு சிலருடன் சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் தொலைத்துபோன மாடுகளைக் கண்டுபிடிக்க முடியாமல் ஓர் இடத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர்.
அந்த இடத்துக்குப் போன வனத்துறையினர் ஏழு பேர், மூன்று பேரை சுட்டுக் கொன்று விட்டனர். காட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஊருக்கு வந்து தகவல் சொல்லாமல் மூன்று பேரின் உடல்களையும் எடுத்துகொண்டு போய்விட்டனர். துப்பாக்கிக் குண்டு காயமடைந்த மகிமை தாஸ் சொன்ன பின்னர்தான் எங்களுக்கு மூன்று பேர் கொல்லப்பட்ட செய்தி தெரியவந்தது." என்கிறார்.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக கொல்லேகால் பகுதிக்கு தமிழ்நாட்டின் சேலம், மேட்டூர், ஈரோடு, பவானி, சத்தியமங்கலம் போன்ற ஊர்களில் இருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கள்ளித்தொட்டி, சாக்கியம், கவுதள்ளி போன்ற ஊர்களில் உள்ள வனத்துறை அலுவலகங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளதாக வனத்துறை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் எழுந்த கண்டனங்கள்
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல. இந்தச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,''குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது'' என்றார்
மேலும், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்றவர்களை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது." எனத் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்தக் கொலைகளை மறைப்பதற்காக அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அப்போது வனத்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர், "மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.
தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசின் எதிர்வினை என்ன?
முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிபிசியிடம், "வேட்டையில் ஈடுபட்டவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தன. இது ஒர் என்கவுன்டர் சம்பவம்." என விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால் ஹானூர் எம்.எல்.ஏ மஞ்சுநாத் மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் புட்டரங்கா ஷெட்டி ஆகியோர் இந்தச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
"வனத்துறை அதிகாரிகளின் தரப்பில் குளறுபடிகள் உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. இதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை," என்று ஹானூர் எம்.எல்.ஏ மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வந்துள்ளதாகக் கூறிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், அதனால் மாஜிஸ்டிரேட் விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு