மக்களை வசியப்படுத்திய ஜப்பானிய கலைஞரின் மாயாஜால படைப்புகள்

    • எழுதியவர், இயன் யங்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கலைஞரான யயோய் குசாமா டோக்கியோவில் உயிரிழந்தார். 97 வயதான அவர், ஒளிரும் நிறங்கள், வடிவங்கள், வடிவமைப்புகள் மற்றும் பிரதிபலிப்புகளைப் பயன்படுத்தி, , உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த அசாதாரணமான, முழுமையாக மாயைக்குள் ஆழ்த்தக்கூடிய கலை உலகங்களை உருவாக்கினார்.

குசாமா, பாப் ஆர்ட் இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்து, தனது படைப்புகள் பரந்த அளவிலான மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற, தேர்வு செய்யப்பட்ட சில கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். டோக்கியோ முதல் நியூயார்க் மற்றும் லண்டன் வரை, அவரது கண்காட்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்த்தன.

அவருடைய அடையாளமாக மாறிய வட்டப் புள்ளிகள் (Polka Dots), முழு கலைக் கூடங்களையும் மாபெரும் சிற்பங்களையும் ஆக்கிரமித்தன. முடிவில்லாத பரப்புக்குள் கரைந்து செல்லும் வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளின் தோற்றத்தை உருவாக்க, அவர் கண்ணாடிகளையும் விளக்குகளையும் பயன்படுத்தினார்.

சிறு வயதில் தமக்கு புள்ளிகள், ஒளிகள் தொடர்பான மாயத் தோற்றங்கள் (hallucinations) ஏற்பட்டதாகவும், 1960களில் இருந்து அந்தக் காட்சிகளைத் தனது கலைப் படைப்புகளில் பயன்படுத்தியதாகவும் குசாமா கூறியுள்ளார்.

1990களில் வெனிஸ் பியன்னாலே கலை விழாவில் ஜப்பானின் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிறகு, குசாமாவுக்கு சர்வதேச அளவில் பெரும் அங்கீகாரம் கிடைத்தது.

மேலுள்ள படத்தில், 2001ஆம் ஆண்டு பாரிஸில் அமைந்திருந்த அவரது 'இன்ஃபினிட்டி மிரர் ரூம்ஸ்' (Infinity Mirror Rooms) ஒன்றுக்குள் அவர் காணப்படுகிறார். கீழுள்ள படத்தில், 2000ஆம் ஆண்டு சிட்னியில், சக ஜப்பானிய கலைஞர் யோகோ ஒனோவுடன் இணைந்து அவர் தோன்றுகிறார்.

நியூயார்க் நகரிலுள்ள மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் (Museum of Modern Art), லண்டனிலுள்ள டேட் மாடர்ன் (Tate Modern), டோக்கியோவில் உள்ள தேசிய நவீன கலை அருங்காட்சியகம் (National Museum of Modern Art) போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் அவர் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், 2017ஆம் ஆண்டில், வாஷிங்டன் டி.சி.யில் இருக்கும் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் ஹிர்ஷ்ஹோர்ன் அருங்காட்சியகத்தில் (Hirshhorn Museum), பார்வையாளர்களே ஒரு வெள்ளை அறையில் 800,000க்கும் அதிகமான வட்டப் புள்ளி ஒட்டுச் சீட்டுகளை ஒட்டினர். சிலர் அவற்றைத் தங்கள் முகங்களில்கூட ஒட்டிக்கொண்டனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் இருக்கும் டேட் மாடர்ன் (Tate Modern) அருங்காட்சியகத்தில் நடந்த குசாமாவின் விரிவான மீள்பார்வைக் கண்காட்சியைத் தொடர்ந்து, 2021 முதல் அதே அரங்கில் அவரது 'இன்ஃபினிட்டி மிரர் ரூம்ஸ்' (Infinity Mirror Rooms) காட்சியும் அமைக்கப்பட்டது. இது பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்ததால், பல முறை நீட்டிக்கப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டில், பாரிஸின் ஷாங்ஸ்-எலிசே (Champs-Élysées) பகுதியில் உள்ள லூயி வுட்டோன் (Louis Vuitton) நிறுவனத்தின் முதன்மைக் கடையின் மேல், குசாமாவின் பிரமாண்டமான உருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அது அங்கு உயரமாகக் கம்பீரமாகத் தோன்றியது.

அதே ஆண்டில், அவிவா ஸ்டுடியோஸ் (Aviva Studios) பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டபோது, அவரது மாபெரும் உருவங்கள், வடிவங்கள் மற்றும் விலங்கு வடிவக் கலைப் படைப்புகள் மான்செஸ்டர் நகரிலுள்ள அந்த அரங்கம் முழுவதையும் நிரப்பின.

மான்செஸ்டரில் இருந்து மெல்போர்ன் வரை, அவரது வட்டப் புள்ளி வடிவக் கலைப் படைப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய நகரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அவர் பல தசாப்தங்களாக, தனது விருப்பத்தின் பேரில் ஒரு மனநல மருத்துவமனையில் வசித்து வந்தார். அவரது மறைவு குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், "கடைசி நாட்கள் வரை தூரிகையை ஒருபோதும் கைவிடாமல் அவர் தொடர்ந்து ஓவியம் வரைந்தார். நித்தியமான அன்பையும் நித்திய ஆன்மாவையும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு